குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் கால்நாட்டுவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2011 11:06
ஏரல் : குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திரு விழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டுவிழா நடந்தது. ஏரல் அருகேயுள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் இரண்டாவது செய்வாய்கிழமை கால்நாட்டப்பட்டு நான்காவது செவ்வாய்கிழமை ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும். திருவிழாவிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முத்துமாலை அம்மனை தரிசித்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டுவிழா நடந்தது. இந்த கால்நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 12ம் தேதி ஆனிப்பெருந்திருவிழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி காலை 8 மணிக்கு மங்கள இசை, மாலை 6 மணிக்கு கூட்டுவழிபாடு, இரவு 7 மணிக்கு உரை அரங்கம், 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்கு மகுட ஆட்டமும், 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு பட்டிமன்றமும், 9 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு கூட்டுவழிபாடு, 11 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, மாலை 3 மணிக்கு பக்தி பாடல் மற்றும் 6 மணிக்கு மங்கள இசை ஆகிய நிகழ்ச்சிகளும். இரவு 1 மணிக்கு நாராயணசுவாமி தேவி சமேதராய் சின்ன சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், வரும் 12ம் தேதி நாராயணசுவாமி தேவி சமேதராய் பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வரும் 19ம் தேதி பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கம் மற்றும் கோயில் அறங்காவலர்கள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.