பதிவு செய்த நாள்
17
ஏப்
2015
11:04
நாகர்கோவில் : சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா வருகிற 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக 19-ம் தேதி காலை கொடி கயிறுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கொடிப்பட்டத்தை பட்டாரியார் சமுதாயத்தினர் மரபுப்படி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
கொடியேற்று விழாவையொட்டி 20-ம் தேதி காலை 7- மணிக்கு திருமுறை பாராயணமும், 9 -மணிக்கு திருக்கொடியேற்றமும் நடக்க உள்ளது. 21-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதலும், காலை 8 மணிக்கு பூங்கோல வாகனத்தில் சந்திரசேகரர் திருவீதி உலா வருதலும், இரவு 9மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 23-ம் தேதி காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதலும், 24-ம் தேதி 5.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதலும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவ மூர்த்திக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும் நடக்கிறது. 27-ம் தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா காட்சியும், 10-மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து, நடராஜ பெருமாளுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகமும் நடக்கிறது.
28-ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், இந்திரன் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. மாலை 6 மணிக்கு சுவாமி மண்டக படிக்கு தந்தப் பல்லாக்கில் எழுந்தருளல், இரவு 9-8-மணிக்கு பக்தி இன்னிசை, 10 மணிக்கு ரிஷப வாகனத்தி, சுவாமி திருவீதி உலா வருதல், 11 மணிக்கு சப்தாவர்ண காட்சி ஆகியவை நடக்கிறது.
29-ம் தேதி மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு புல்லாங்குழல் இசையும், அதன் பின்னர் தெப்பத்திற்கு சுவாமியும், அம்பாளும், பெருமாளும் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 12-மணக்கு திரு ஆராட்டு ஆகியவை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சிவராமசந்திரன், மேலாளர் ஆறுமுக நயினார் கணக்கர் கண்ணன் மற்றும் பக்த சங்கத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.