பதிவு செய்த நாள்
17
ஏப்
2015
11:04
திருச்சி :ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சித்திரை தேர் திருவிழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நாளை நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா, கடந்த, 10ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கண்ணாடி அறையில் நம் பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது.கடந்த, 11ம் தேதி, நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து, பல்லக்கில் புறப்பாடும், கற்பகவிருஷ வாகனத்தில் சித்திரை வீதிகள் வலம் வருதல் நடக்கிறது. நாளை மூன்றாம் நாள், சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் வலம் வந்தார். நான்காம் நாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து, தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு, நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.
அடுத்தடுத்த நாட்களில் சேஷ வாகனம், அனுமந்த் வாகனம், தங்க ஹம்ச வாகனம், யானை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.நாளை, சித்திரை தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை, 3.45 மணிக்கு நம்பெருமாள், கண்ணாடி அறையில் இருந்து, திருத்தேருக்கு புறப்படுதல் நடக்கிறது.
சித்திரை தேர் மண்டபத்தில் காலை, 4.30 மணி முதல், 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் தேரில் எழுந்தருளல் நடக்கிறது. காலை, 6 மணிக்கு, தேர் வடம் பிடிக்க தேரோட்டம் நடக்கிறது. அன்று, மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.பத்தாம் நாளான, 19ம் தேதி சத்தாவரணமும், பதினோராம் நாளில் ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் புறப்பட்டு, சித்திரை வீதிகள் வலம் வந்து, மூலஸ்தானம் சேர்தலும் நடக்கிறது.