பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
11:04
கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடியில், கி.பி., 7ம் நுாற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்ட சோமநாதீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், 100 ஆண்டுகளுக்குப்பின், மே மாதம் 1ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியிலிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ÷ சாமண்டார்குடியில், கி.பி., 7ம் நுாற்றாண்டில் செங்கற்கள் மூலம் லோகாம்பாள் உடனுறை சோமநாதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. கி.பி., 10ம் நுாற்றாண்டில் பராந்தக சோழனால், இக் கோவில் முற்றிலும் கருங்கல்லால் புனரமைக்கப்பட்டது. வேத குருவின் சாபத்தால் தனது கலையை இழந்து பரிதவித்த சந்திரன், கோ (பசு)வின் வாயிலிருந்து வெளிப்பட்ட கோமுகி நதியில் நீராடி, சோமண்டார்குடியில் உள்ள சோமநாதீஸ்வரரை பூஜித்து, சாப விமோசனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. கோவில் மூல விமானத்தில் ரிஷபாரூடத்தில் எழுந்தருளிய சிவன் பார்வதி சிற்பம் இன்றும் காட்சி தருகிறது. சந்திரன் (சோமன்) வழிபட்டதால், சோமநாதீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு வந்ததுடன், இறைவன் பெயராலே இவ்வூர் ÷ சாமண்டார்குடி (சந்திரன் தங்கியது) என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் சூரியனுக்கு பூஜை உண்டு; சந்திரனுக்கு பூஜை இல்லை. ஆதிசங்கரர் பூஜித்த பெருமையும் இத் தலத்திற்கு உண்டு. இக்கோவிலின் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு, வரும் மே மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.