பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
12:04
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில், 350 ஆண்டுகள் பழமையான கவையகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மே 1ம் தேதி நடக்கிறது. துடியலுார் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் பழமையான கவையகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அரசன், வேப்பன், புன்னை மரங்கள் சூழ சிறிய அளவில் இருந்தது. அதை திருத்தி அமைத்து கவைய காளியம்மன், கன்னிமூலகணபதி, விஷ்ணுநாகர், சப்தகன்னிமார், லட்சுமிகணேசர், கருப்புசாமி மற்றும் முன் மண்டபம், கோபுர கலசத்துடன் பரிவார தேவதைகளுக்கு சன்னதிகள் புதியதாக எழுப்பப்பட்டுள்ளன.கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 29ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் கால பூஜைகள் நடக்கின்றன.மே 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு கவையகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அலங்கார பூஜை, மதியம் அன்னதானம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை மதுரை பாலகிருஷ்ண பட்டாச்சார் நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை கட்டடத் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.