ஆண்டிபட்டி; தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை காரணமாக வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கும் அழகரை வரவேற்க அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்தாலும் இதுவரை அணைக்கு வந்துசேரவில்லை. இருந்தபோதும் தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வந்த மழைநீர், பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் ஆகியவற்றால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஏப்ரல் 12-ல் 35.99 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் ஏப்ரல் 15-ல் 36.09 அடியாகவும், ஏப்ரல் 17-ல் 37.34 அடியாகவும், இன்று காலை 6 மணிக்கு 37.96 அடியாகவும் உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடி. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீருக்காக வினாடிக்கு 40 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 210 கன அடியாக இருந்தது. மூலவைகை ஆற்றில் இருந்து வரும் நீர் சிலதினங்களில் அணைக்கு வந்து சேரும் என்பதாலும், அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கோடை மழைக்கான சூழல் தொடர்வதாலும் அணையின் நீர் மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு இம்மாத இறுதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.