அவிநாசி : அவிநாசி அருகே சிவளாபுரி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நடுவச்சேரியில் உள்ள சிவளாபுரி அம்மன் கோவிலில், 29வது ஆண்டு குண்டம் திருவிழா, 18ல் கிராம சாந்தியுடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மதியம், குண்டம் திறக்கப்பட்டு, பூ வளர்க்கப்பட்டது.வடுகனூர், தளிஞ்சிப்பாளையத்தை சேர்ந்த பக்தர்கள், தீர்த்தக்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். ஊஞ்சப்பாளையம் பக்தர்கள் சந்தனக்குடம் மற்றும் பூச்சட்டி கொண்டு வந்தனர். நேற்று அதிகாலை 3:00க்கு படைக்கல ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. 5:30 முதல் பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 9:00க்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.