பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
11:04
சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு தமிழகத்தில் கட்டடங்கள் திறப்பு விழா, திட்டம் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா எதுவும் நடைபெறவில்லை. சென்னையில் மெட்ரோ ரயில் துவக்கமும் தள்ளி போடப்படுகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின்னரே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியில் உள்ளவர்கள் நினைப்பதால் திருப்பணி முடிந்தும் 85 கோவில்கள் கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த செப்டம்பரில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். கடந்த ஆறு மாதங்களில் எந்த திட்டத்தை யும் முதல்வர் ஓ.பி.எஸ்., துவக்கி வைக்கவில்லை. எந்த கட்டடத்தையும் திறந்து வைக்கவில்லை; அடிக்கல் நாட்ட வில்லை. எதற்கும் அவருக்கு கட்சி தலைமை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பணி முடிக்கப்பட்ட கட்டடங்கள், புதிதாக வாங்கப்பட்ட பஸ்கள், மெட்ரோ ரயில் என அனைத்தும் ஜெயலலிதா வருகைக்காக காத்திருக்கின்றன. அதற்காகவே சர்வதேச முதலீட்டாளர் மாநாடும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் கடவுள் குடியிருப்பதாகக் கூறப்படும் கோவில்களும் தற்போது இடம் பெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36,534 கோவில்கள் உள்ளன.இக்கோவில்களுக்கு ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 290.60 கோடி ரூபாய் மதிப்பில் 7,327 கோவில்களில் திருப்பணி முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் 85 கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகத்திற்கு தயாராகி உள்ளன. ஆனால் பணி நடைபெறுவது போல் காண்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
* ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் திருப்பணி முடிந்து விட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால், கோவில் நிர்வாகம், திருப்பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தெற்கு மற்றும் வடக்கு ராஜகோபுர பணி உள்ளது என்கிறது.
* ஸ்ரீவில்லிபுத்தூர், வடபத்ரசாயி கோவில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் கோவில் நிர்வாகம், சிறிய வேலைகள் இருப்பதாகக் கூறுகிறது. அதே நேரத்தில் இங்கு மே மாதம் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் திருப்பணி 80 சதவீதம் நிறைவு அடைந்துள்ளது. மண்டபம் புனரமைப்பு உள்மதில் சுவர் புனரமைப்பு பணி நடந்து வருகிறது என கோவில் தரப்பில் கூறப்படுகிறது.
* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பணிகள் நிறைவு பெறவில்லை.
* அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திருப்பணி முழுமை அடைந்துள்ளது. இவ்வாறு பல கோவில்களில் திருப்பணி முழுவதும் முடிந்து உள்ள நிலையில் சிறிய வேலைகள் நடப்பதாகக் காரணம் கூறி கும்பாபிஷேகம் நடத்தாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவது பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.