பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
12:04
திருத்தணி: நல்லாங்குளத்தின் படிகள் உடைந்து உள்ளதாலும், குளத்துநீர் துர்நாற்றம் வீசுவதாலும், பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி அடுத்த, மேல்திருத்தணியில் நல்லாங்குளம் உள்ளது. இந்த குளத்தை, நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆண்டுதோறும் முருகன் கோவிலில் நடக்கும் ஆடி கிருத்திகை திருவிழாவின்போது, மூன்று நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து, இக்குளத்தில் புனித நீராடிய பின், மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், நல்லாங்குளத்தை உரிய முறையில் பராமரிக்காததால், தற்போது குளத்தின் படிகள் உடைந்துள்ளன. மேலும், இங்கு, சில சமூக விரோதிகள், மதுவை குடித்துவிட்டு, பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாக்கெட்டுகளை குளத்தில் வீசுவதாலும், அப்பகுதிவாசிகள் சிலர், குளத்தில் துணிகள் துவைப்பதாலும், தண்ணீர் மாசு படிந்து துர்நாற்றம் வீசுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் ஆடி கிருத்திகை விழா நடக்க உள்ளதால், புனித நீராட வரும் பக்தர்கள், முகம் சுளிக்கும் நிலை ஏற்படும். எனவே, நகராட்சி நிர்வாகம் பழுதடைந்த நல்லாங்குளத்தை சீரமைத்து, தர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.