கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் தோப்பறை: காரியாபட்டியில் காலம் காலமாக தயாரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2015 12:04
காரியாபட்டி: மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படும் தோப்பறைகள் காரியாபட்டியில் காலம் காலமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும்போது தண்ணீர் பீச்சு அடிப்பது முக்கிய பங்கு வகிக்கும். இதை பக்தர்கள் நேர்த்தி கடனாக செய்வர். இதற்காக தோல் பை எனப்படும் தோப்பறை தயாரிக்கும் பணியில் காரியாபட்டியை சேர்ந்த 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டு மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு சில நாட்களே உள்ள நிலையில் தோப்பறை தயாரிப்பு பணி முடிந்து விற்பனைக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளது. இத்தொழிலில் போதிய வருவாய் இல்லாவிட்டாலும், 8 தலைமுறையாக காலம்காலமாக இப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளி முருகன் கூறுகையில்," சித்திரை விழாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தோப்பறை தயாரிக்கும் பணிக்கு தயாராகிவிடுவோம். எந்த வேலை இருந்தாலும், அதை தள்ளி வைத்துவிட்டு இதற்கான தோல் வாங்க புதுக்கோட்டை, திண்டுக்கல், சமயநல்லூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு செல்வோம். அவற்றை வாங்கி பதப்படுத்தி, மெருகேற்றும் வேலைகளில் ஈடுபடுவோம். ஒவ்வொரு ஆண்டும் 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் தோப்பறைகள் தயாரித்து மதுரை கீழமாசி வீதி பூக்கடை பஜாரில் விற்பனைக்கு கொண்டு செல்வோம்,” என்றார்.
மணிமுத்து," இரண்டு மாதங்களுக்கு வேறு தொழிலுக்கு போகாமல் இதை தொண்டு ஊழியமாக செய்கிறோம். தோப்பறை தயாரிக்கும் பணி காரியாபட்டியை தவிர வேறு எங்கும் கிடையாது. அப்படி சிலர் தயாரித்தாலும் தொடர்ந்து அவர்களால் தயாரிக்கும் பணியில் ஈடுபட முடியாது ,” என்றார். பாலமுருகன்," தோப்பறை தயாரிக்க குறைந்த பட்சம் 350 முதல் 400 ரூபாய் செலவாகிறது. 500 முதல் 600 ரூபாய் வரை விற்கிறோம்.கஷ்ட நிலையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதனால் எங்களால் அதிக விலைக்கு விற்க முடியவில்லை. தோப்பறை தயாரிக்க வாங்கும் கடனை அடைக்கவே சரியாக இருக்கும். கடவுளுக்கு தொண்டு செய்யவே இந்த கஷ்டங்களை தாங்கி கொள்கிறோம்,” என்றார்.