பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடந்தது. ரத்தினக்கற்கள் பதித்த ராயர் கிரீடம், செங்கோலுடன் மீனாட்சி அம்மன் மாசிவீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தார். பட்டாபிஷேகம் விழாவிற்காக அம்மன் சன்னதி ஆறுகால் பீடம் ஏழு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வெள்ளி சிம்மாசனத்தில் சிவப்பு பட்டுடுத்தி, பச்சை பட்டு தலைப்பாகையுடன் அம்மன் சர்வ அலங்காரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு எழுந்தருளினார். விக்னேஸ்வர பூஜையுடன் பட்டாபிஷேக விழா துவங்கியது. புண்ணியாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, தீபராதனைகள் நடந்தன.அனிக்கை விநாயகர் கோயிலில் இருந்து ரத்தினக்கற்கள் பதித்த ராயர் கிரீடம், செங்கோல் கொண்டு வரப்பட்டது. கிரீடத்திற்கு புனித நீரூட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்தானிகம் பட்டர்கள் செந்தில்பட்டர், சி.எம்.எஸ்.குமார் பட்டர் தலைமையில் அம்மனுக்கு இரவு 7.40 மணிக்கு கிரீடம் சூட்டப்பட்டது. செங்கோல் வழங்கப்பட்டது. கோயில் சார்பில் காப்பு கட்டிய விவேக் (எ) கணபதி சுந்தரம் பட்டர் தீபாராதனைகள் காண்பித்தார்.
மதுரை அரசாளும் மீனாட்சி: பட்டாபிஷேகத்தை ஏற்ற மீனாட்சி அம்மன் மதுரை ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் என்பதும், சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாகவும் ஐதீகம். மீனாட்சி அம்மன் பட்டம் சூட்டியதை பறைசாற்றும் விதமாக அம்மன் பிரதிநிதியாக தக்கார் கருமுத்து கண்ணன், அம்மனிடம் இருந்து செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து செங்கோலை மீண்டும் அம்மனிடம் வழங்கினார்.வெள்ளி சிம்மாசன வாகனத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி நேற்றிரவு மாசிவீதிகளில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று திக்கு விஜயம்: சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று (ஏப்.,29) வடக்கு - கீழமாசி வீதி சந்திப்பில் உள்ள லாலாஸ்ரீரெங்க சத்திரத்தில் மாலை 6 மணிக்கு திக்கு விஜயம் நடக்கிறது. நாளை (ஏப்.,30) கோயிலுக்குள் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடக்கிறது.