பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
11:04
கரூர்: கரூரை அடுத்துள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் தபோவனத்தில், பக்தர்கள் சாப்பிட்ட இலைகள் மீது, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரையில், 350 ஆண்டுக்கு முன் சோமநாத யோகி, பார்வதி தேவிக்கு மகனாக பிறந்தவர் சிவராம கிருஷ்ணர். வேத பாடம், கீர்த்தனைகள் பயின்று, மைசூரு சமஸ்தான வித்வான் அந்தஸ்து பெற்றார். அவருடைய குருநாதர் பரமசிவேந்திரர் வாக்குப்படி, சிவராம கிருஷ்ணர் சந்நியாசம் மேற்கொண்டார். சந்தியாசம் பெற்ற சிவராமகிருஷ்ணருக்கு, ‘சதாசிவம்’ என்று பெயர் சூட்டி தவமிருக்க கூறினார் அவருடைய குரு.கரூர் அடுத்துள்ள நெரூர், கொடுமுடி பகுதிகளுக்கு வந்த சதாசிவம், நெரூர் காவிரிக்கரையில் தபோவனம் அமைத்து தவம் இருந்தார். தான் சமாதியடைய போகும் காலம் நெருங்கியதை உணர்ந்த சதாசிவம், யோக வலிமையால், தன்னுடைய சீடர்களான புதுக்கோட்டை, மைசூரு, தஞ்சாவூர் மகாராஜாக்களை நெரூருக்கு வரவழைத்தார். அரசர்களிடம், சமாதி அடைவற்கான ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.சதாசிவம் பிரம்மேந்திராள் யோகத்தில் ஆழ்ந்ததும், அவர் வாக்குப்படி சாமக்கிரியைகளால், அவர் உடல் மறைக்கப்பட்டது. சதாசிவ பிரம்மேந்திராள் சமாதியான இடத்தில் காசி சிவலிங்கம், வில்வ மரம் தோன்றியது. அங்கு, தபோவனம் அமைக்கப்பட்டு, தியானம், கீர்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.ஆண்டு தோறும் சித்திரை மாதம், வைசாக சுத்த தசமி தினத்தன்று சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் ஆராதனை உற்சவம் நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை, பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.கரூரை அடுத்துள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் தபோவனத்தில், 101ம் ஆண்டு ஆராதனை உற்சவம், கடந்த, 23ம் தேதி, லட்சார்ச்சனையுடன் துவங்கியது. நேற்று, பக்தர்களுக்கு சமபந்தி போஜனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் சாப்பிட்ட இலைகளில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவுக்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர். நெரூர் காவிரி கரையோரம், நேற்று மாலை சங்கீத ஆலாபனை நடந்தது.