பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
11:04
செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 13 குண்டங்களுடன் யாகசாலை அமைத்துள்ளனர். செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 1ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு 1, 500 கலசங்களை பிரதிஷ்டை செய்யவும், மாரிய ம்மன், செல்லியம்மன், பூவாத்தம்மன், ராஜா கோபுரம், கருவரை கோபுரம், விநாயகர், முருகன் என 13 யாக குண்டங்களை அமைத்துள்ளனர். இன்று காலை மகா கணபதி ஹோமம், மகாஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், தெய்வங்கள் கரிக்கோல ஊர்வலம், கஜபூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை, தனபூஜை செய்ய உள்ளனர். மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடக்க உள்ளது. நாளை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாசாலை பூஜையும் செய்ய உள்ளனர். மறுநாள் (1ம் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் செல்லியம்மன், விநாயகர், முருகர், பூவாத்தம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், காலை 7 மணிக்கு கும்ப புறப்பாடும் 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் ஐந்து நிலை ராஜகோபுரம், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர்.