பதிவு செய்த நாள்
05
மே
2015
11:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், கருவறை முன் முக்கிய பிரமுகர்களுக்கான அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டதுடன், அண்ணாமலையாரை தரிசிக்க, நிரந்தர மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில், சித்திரை பவுர்ணமி கிரிவலம், கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இதனால், சன்னதிகளில், முக்கிய பிரமுகர்கள் தரையில் அமர்ந்து தரிசனம் செய்யும் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.இத்துடன், மூலவரை அருகில் சென்று தரிசனம் செய்ய, பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு மேடையும் அமைக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னதி எதிரிலும், உண்ணாமுலையம்மன் மூலவர் சன்னதி எதிரிலும், பலகைகளால் ஆன சிறப்பு மேடை அமைக்கப்பட்டன. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர், இரா.செந்தில்வேலவன் கூறியதாவது:அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதால், மூலவரை தெளிவாக தரிசனம் செய்ய சிறப்பு மேடை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே மூலவரை தரிசிக்க, மூலவர் சன்னதியின் பக்கவாட்டில், இரண்டு தனி மேடை உண்டு. இப்போது, மூன்றாவதாக, சன்னதிக்கு எதிரே, சிறப்பு மேடை அமைக்கப்படுகிறது.மற்ற இரண்டு மேடைகளை விட, மூன்றாவது மேடை உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது. இனி இந்த மேடை, நிரந்தரமாக அப்படியே இருக்கும்.இந்த சிறப்பு மேடையில் நின்று, சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் இல்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.