பதிவு செய்த நாள்
05
மே
2015
11:05
திருப்பூர் : திருப்பூர் அருகே, ஆயிரம் ஆண்டு பழமையான அய்யனார் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், கண்டியன்கோவில், கோவில்பாளையம் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வணிகப்பெரு வழியருகே வழிபாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய, இரண்டு அய்யனார் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் கூறியதாவது: தமிழகத்தின் பண்டைய வணிக பெருவழிகளில் முக்கியமானது, ராசகேசரி பெருவழி. இதில், கோவில்பாளையம், கண்டியன் கோவிலில் இரு சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 100 செ.மீ., உயரம்; 95 செ.மீ., அகலம்; 35 செ.மீ., கணம் உள்ள இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன.சங்க காலத்தில் சாத்தன் எனவும், சோழர் காலத்தில் இருந்து அய்யனார் எனவும், குறிப்பிடப்படுகிறது. கோவில்பாளையம் அய்யனார், பீடத்தின் மீது, வலது காலை மடித்தும், இடது காலை குத்திட்டு, அதன் மீது இடது கையை வைத்தபடியும், வலது கையில் செண்டு (ஆயுதம்) பிடித்தபடி, மகாராஜ லீலாசனத்தில் உள்ளார்.கண்டியன் என்பது, ருத்திராட்ச மாலை அணிந்த சிவபெருமானை குறிக்கிறது; இக்கிராமம் கண்டியன் கோவில் என பெயர் பெற்றது. இங்குள்ள அய்யனார், வலது கையில் அபயஹஸ்தம் முத்திரை காட்டி அருள்பாலிக்கும் நிலையிலும், தலையின் இருபுறமும் திரிசடை, சுருள்சடை அடர்த்தியாகவும், அழுத்தமாகவும் தொங்கி அமைந்த ஜடாபாரம் கோலத்தில் உள்ளார்.அய்யனார் பீடத்தில் அமர்ந்த நிலையில் பூரணை, புஷ்பகலை என்ற இரு மனைவியர் உள்ளனர். பெண்கள் சாமரம் வீசிக்கொண்டுள்ளனர். பீடத்தின் கீழ் நாயும், பன்றியும் விளையாட, வலதுபுரம் அய்யனாரின் வாகனமான யானை உள்ளது. இந்த அமைப்பு முறையை ஆய்வு செய்தபோது, பிற்கால சோழர் காலத்தை சார்ந்த சிற்பங்கள் என அறிய முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.