மானாமதுரையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய வீர அழகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2015 12:05
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயில் சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் வீரஅழகர் இறங்குதல் நேற்று காலை நடந்தது. கடந்த 2ம் தேதி கோயிலை விட்டு புறப்பட்ட வீர அழகர் நேற்று முன்தினம் இரவு தியாகவிநோத பெருமாள் கோயிலில் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். நேற்று காலை அங்கிருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட வீரஅழகருக்கு ஆனந்தவல்லி- சோமநாதர் ஆலயத்தின் முன்புறம் வெண்கொற்ற குடை பிடித்து வரவேற்பளிக்கப்பட்டது. கோயில் முன் புறம் காலை 9.10 மணிக்கு வைகை ஆற்றில் வெண்பட்டு உடுத்தி ‘கோவிந்தா’ கோஷங்களுக்கு இடையே வீரஅழகர் இறங்கினார். விரதமிருந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து வீரஅழகரை குளிர்வித்தனர். டி.எஸ்.பி., புருசோத்தமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிலாச்சோறு திருவிழா இன்று இரவு நடை பெறுகிறது. மதுரை வைகை அணையில் இருந்து அழகர் இறங்கும் வைபவத்திற்காக தண்ணீர் திறக்கப் பட்டது. நேற்று மதியம் திருப்பாச்சேத்தி வரை தான் தண்ணீர் வந்தது. மானாமதுரைக்கு தண்ணீர் வராததால் பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் தவித்தனர்.