பதிவு செய்த நாள்
06
மே
2015
12:05
காஞ்சிபுரம்: சித்திரை பவுர்ணமிக்கு நடைபெறும் நடவாவி உற்சவத்தில், காஞ்சிபுரம் பாலாற்றில், வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். காஞ்சிபுரம் அடுத்த, பாலாற்றில் நடைபெற்ற நடவாவி உற்சவத்தை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில், வரதராஜ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, செவிலிமேடு, புஞ்சையரசந்தாங்கள், துாசி, நத்தகொள்ளை, துாசிவாகை போன்ற பகுதிகளில் வீதியுலா சென்று, திங்கட்கிழமை ஐயங்கார்குளம் சஞ்சீவராயர் கோவில் மண்டபத்தில், இரவு, 8:30 மணியளவில் எழுந்தருளினார். அங்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, அன்று இரவு, 9:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள நடவாவி கிணற்றில் பெருமாள் எழுந்தருளினார். அன்று இரவு, 11:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு, 1:00 மணிக்கு செவிலிமேடு பாலாற்றில் எழுந்தருளிய பெருமாளுக்கு திருமஞ்சனமும், பிரம்ம ஆராதனமும் நடந்தது. இதையடுத்து, அதிகாலை, 2:15 மணியளவில், பாலாற்றில் இருந்து புறப்பட்ட பெருமாள், விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு, மண்டகப்படி முடிந்த பின், நேற்று காலை, 6:00 மணிக்கு, வரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைந்தார்.