சென்னை: பாடியநல்லூரில், நன்னிலம் ஸ்ரீதாண்டவராய சுவாமிகளின் கைவல்ய நவநீத ஞானப்பெருமன்றம் சார்பில் மே 9, 10, 11ம் தேதிகளில் கைவல்ய நவநீத மாநில மாநாடு நடக்கிறது. கைவல்ய நவநீதமென்பது, வேத உபநிடதங்களின் சாரமாக அத்வைத தத்துவத்தை அழகிய தமிழில் விளக்கும் அரிய நூல். இது நன்னிலத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்ரீதாண்டவராயர் என்னும் பெரியோரால் இயற்றப்பட்ட நூல். இந்த உயரிய நூலை ஆன்ம லாபம் அடையும் வேட்கையுள்ளவர்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். இந்நூல் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இன்னூலை படிப்போர்கள் மற்றும் கற்றுத் தரும் குருமார்கள் தமிழகமெங்கும் பரவியுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி இந்நூலைப் பற்றி மேலும் ஆராய்வதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதுவரை இத்துணை பெரிய அளவில் இது போன்ற மாநாடு கூட்டப்படாததினால் இது சரித்திரச் சிறப்பு வாய்ந்தது. இதில் சுமார் 500 பேர் பங்கு கொள்கின்றனர். இதில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்லை.