பதிவு செய்த நாள்
08
மே
2015
10:05
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில், சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில், சித்திரை தேரோட்டத்தையொட்டி கடந்த, 21ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. இதை தொடர்ந்து, ஏப்ரல், 28ம் தேதி பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாள்தோறும் இரவு யானை, குதிரை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடந்தது. திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, நேற்று காலை, 10.30 மணிக்கு நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது, பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். சிறுவாச்சூர் கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. பெரம்பலூர், அரியலூர், துறையூர், திருச்சி, கடலூர், நாமக்கல், சென்னை, கடலூர் உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (8ம் தேதி) உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் நிகழ்ச்சியும், 9ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், 11ம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் ஸ்வாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையரும், தக்காருமான முல்லை, செயல் அலுவலர் (பொ) சந்திரசேகரன் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.