பதிவு செய்த நாள்
09
மே
2015
10:05
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள், பாஷ்யகார சுவாமி கோவிலில், நேற்று பெருமாள் உற்சவ திருவிழாவை ஒட்டி, தேரோட்டம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், பெருமாள் உற்சவ திருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காலை, மாலை நேரங்களில் சேஷ, ஹம்ச, ஹனுமந்த, யாளி, யானை என, பலவகை வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று காலை 5:15 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், தேரில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகமும், ஆராதனையும் நடந்தது. காலை 8:45 மணிக்கு, பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், மதியம் 2:00 மணிக்கு நிலைக்கு வந்தது. இதன்பின், மாலை பெருமாளுக்கு திருமஞ்சனமும், இரவில் புஷ்ப பல்லக்கில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.