பதிவு செய்த நாள்
13
மே
2015
05:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த மழையால், ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை நீர் ஒரு அடி உயரத்திற்கு தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் தீவில் பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், நகராட்சி அலுவலகம், சீதா தீர்த்தம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது. தனுஷ்கோடி செல்லும் தேசிய சாலையின் இருபுறமும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் திணறின. ராமேஸ்வரம் திருக்கோயில் மேல்தளத்தில் தேங்கிய மழைநீர், வாறுகால் வழியாக வெளியேற முடியாமல், கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதிகள் அமைந்துள்ள முதல் பிரகாரம், பக்தர்கள் நீராட செல்லும் 2ம் பிரகாரத்தில், ஒரு அடி உயரத்திற்கு தேங்கி நின்றது.அதன் வழியாக பக்தர்கள் பெரும் சிரமத்துடன் நடந்து சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். லேசாக மழை பெய்தாலும், திருக்கோயிலுக்குள் தேங்கிவிடும் மழை நீரை அகற்றிட, கோயில் நிர்வாகம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கூறினர்.