பதிவு செய்த நாள்
21
மே
2015
10:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் கும்பிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின் நாளை , (மே 21) நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அருகே அமைந்துள்ளது வடபத்ரசயனர் கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2000ல் நடந்த நிலையில் தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, விமான கலசங்களுக்கும் தங்கம் பூசப்பட்டுள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கு பின் நாளை காலை 8மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மே 18 ல் விஜயபாஸ்கர் பட்டர் தலைமையில் யாகசாலை பூஜைகள் துவங்கி கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இதையொட்டி ராஜகோபுரம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. வடபத்ரசயனர் சன்னதியும் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
காலை 8மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் இதற்கான பணிகளை கலெக்டர் ராஜாராமன், விருதுநகர் எஸ்.பி.,மகேஷ்வரன், திருப்பணிக்குழுதலைவரான ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா, தக்கார் ரவிச்சந்திரன், இணை ஆணையர் செல்வராஜ், செயல்அலுவலர் ராமராஜா நேற்று பார்வையிட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதுமிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட உள்ளன . பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் நாங்குனேரி, திருப்பதி, ஸ்ரீரங்கம் தலங்களை சார்ந்த ஜீயர்சுவாமிகள் பங்கேற்கின்றனர். ஸ்ரீவி.,டி.எஸ்.பி. ,முரளிதரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் "மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். விழாவை யொட்டி கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.