பதிவு செய்த நாள்
22
மே
2015
11:05
நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வெள்ளிக்கிரீடம் மற்றும் 21 வகையான பூஜை பொருட்களை மும்பை தொழில் அதிபர் காணிக்கையாக வழங்கினார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். அவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை வழங்குகிறார்கள். மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் விகாஸ் பட்டீல். இவர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, பகவதி அம்மனுக்கு வெள்ளிக்கிரீடம் மற்றும் 21 வகையான வெள்ளி பூஜை பொருட்களை காணிக்கையாக கோவில் மேலாளர் சிவராமச்சந்திரனிடம் வழங்கினார். இந்த வெள்ளிக்கிரீடத்தில் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.பூஜை பொருட்களில், திருக்கை, திருக்கால்கள், காது தோடுகள், 2 கெண்டி, 2 குத்து விளக்குகள், 1 முக்கவர விளக்கு, தீபாராதனை தட்டு, தாமரை பூ தட்டு, பூஜை மணி, சந்தன கிண்ணம், செம்பு, சங்கு, ஜெபமாலை, 2 வளையல்கள் மற்றும் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டியாணம் உள்பட 21 பொருட்கள் உள்ளன. இந்த பூஜை பொருட்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அன்னதானமும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடந்தது.