பதிவு செய்த நாள்
22
மே
2015
03:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி சரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2002ல் நடந்த நிலையில், வடபத்ரசயனர் கோயிலில் பலகோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிந்து, இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி அதிகாலை 5 மணிமுதல் பக்தர்கள் திரண்டனர்.ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்,வஸ்திரங்கள் மாட வீதிகள் வழியாக வடபத்ரசயனர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. காலை 8.24 மணிக்கு அரசின் கூடுதல் தலைமைச் செயலர் கண்ணன், அறநிலையத்துறை ஆணையாளர் வீரசண்முகமணி ஆகியோர் பச்சை கொடியசைக்க கும்பாபிஷேகம் நடந்தது. மூலஸ்தான கோபுரத்தில் விஜயபாஸ்கர் பட்டர், விமானகோபுரத்தில் வாசுதேவன் பட்டர், ராஜகோபுரத்தில் சுரேஷ் பட்டர், நரசிம்மர் கோபுரத்தில் தேவராஜ் பட்டர், சக்கரத்தாழ்வார் கோபுரத்தில் ராஜி பட்டர், ஆண்டாள் நந்தவனத்தில் கோவிந்தாச்சாரி ஆகியோர் தலைமையில் கும்பங்களில் புனித நீர் ஊற்ற தீபராதனை காண்பிக்கபட்டு, பக்தர்கள் மீது புனித நீரும் தெளிக்கப்பட்டது. நாங்குனேரி ஜீயர், ஸ்ரீரங்கம் ஜீயர், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் சீனிவாசராஜீ, உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோயில் வளாகத்தினை சுற்றி 5 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.