பதிவு செய்த நாள்
23
மே
2015
11:05
பழநி: பழநி பெரியாவுடையார் கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழநியில் உள்ள கோதைமங்கலம் சண்முகநதிக்கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் சிவன்கோயில், 1000 ஆண்டுகளுக்கு முன் சேரர், சோழர், பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. இக்கோயிலில் கடந்த 1993ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் ரூ.85 லட்சம் செலவில் கோயிலில் திருப்பணிகள் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி திருச்செங்கோடு, கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்திருந்த சிவாச்சாரிகள், யாகசாலைகளில் மே 15 முதல் ஆறுகால யாகபூஜை, வேதபாராயணம், திருமுறை மந்திரங்கள் ஓதினர். மூலவர் பெரியாவுடையார், தெட்சணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாத்தப்பட்டு கும்பகோணத்திலிருந்து புதிதாக வந்த கோபுரக்கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 4.30மணிக்கு ஆறாம்கால பூஜையும், பிம்பசுத்தி காப்புகட்டுதல் செய்யப்பட்டது. காலை 8மணிக்கு யாகசாலையிலிருந்து சக்திகும்பம் உள்ளிட்ட கலசங்கள், சிறப்புபூஜைக்குப்பின், மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. காலை 8.30 மணிக்கு பெரியாவுடையார், பரிவாரதெய்வங்களின் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து காலை 8.45 மணிக்கு மூலவர் பெரியாவுடையாருக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.மாலை 5 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமிபுறப்பாடு நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சண்முகநதி படித்துறையில் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.