இடிந்த நிலையில் கிடக்கும் சேதுக்கரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் அர்த்த மண்டபம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2015 03:05
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரைக்கு செல்லும் வழியில் சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும், புதர்களாலும் சிறைப்பிடிக்கப்பட்டு மூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், தாங்கி நிற்கும் சிற்பத்துõண்கள் பராமரிப்பின்றி மழை, வெயில், இயற்கை சீற்றங்கள் பாதிப்பிற்குள்ளானது குறித்து தினமலர் நாளிதழில் ஜன.17 அன்று படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் ராமநாதபுரம் உழவாரப்பணிக்குழுவினர் செடிகளை அகற்றி துõய்மை செய்தனர். இந்நிலையில் (மே.16ல்) கடந்த வாரம் பெய்த மழைக்கு கோயின் கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தின் பின்புறப்பகுதிகள் முழுமையாக கீழே விழுந்து சேதமடைந்து கிடக்கிறது.
மழைகாலங்களில் நீரால் தேங்கி உள்ளது. திருக்கோஷ்டியூரை சேர்ந்த பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில், ஏகாந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். சேது ஹிமாச்சலா என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை கூறப்படுகிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில்தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார். ராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தம், கடுமையான காய்ச்சல், தலைவலியினை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலின் அருகே வெண்பளிங்கு அகத்தியர் கோயில் கும்பாபிஷேகம் கண்டுள்ளது. இவ்வளவு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இக்கோயிலின் நிலையை காணும்போது கண்ணீரை வரவழைக்கிறது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையுடன் இணைந்து சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் பூர்வாங்கப் பணிகளை தொடங்கி, கும்பாபிஷேகத்திற்கு வழிகாணும் முயற்சியை எடுக்க வேண்டும். இதனால், பழமையான பெருமாள் கோயிலின் சிறப்புகளை வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளலாம் என்றார்.