பதிவு செய்த நாள்
25
மே
2015
10:05
உத்திரமேரூர், மே: ஆலஞ்சேரி, அவ்வையார் கோவிலில், கூழ்வார்த்தல் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஒரு சமயம் மதுரையில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சிவனின் புகழ் பாடிக் கொண்டே ஊர், ஊராக அவ்வையார் சென்றாராம்; ஒரு மதிய நேரத்தில், உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தை கடந்தபோது, கடுமையான தண்ணீர் தாகத்தால் அவர் தவித்துள்ளார். பசியாறிய அவ்வை அச்சமயம், இந்த கிராமத்தில் வாழ்ந்த சிலர், அவருக்கு கூழ் கொடுத்து உபசரித்துள்ளனர். தன்னுடைய பசியை போக்க முன் வந்த அப்பகுதிவாசிகளை வாழ்த்திய அவ்வையார், அங்கிருந்த ஆல மரத்தடியில் அமர்ந்து பாடல் பாடியதாக கூறப்படுகிறது. அவ்வையாரின் ஆசி பெற்ற ஊர் இது வென்றும்; அவரது ஆசி எப்போதும் இந்த கிராமத்திற்கு உள்ளதென்றும், இப்பகுதிவாசிகள் தற்போதும் உறுதியாக நம்புகின்றனர். இதனால், இப்பகுதியில் அவ்வையாருக்கு கோவில் கட்டி, ஆண்டுதோறும் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் கூழ்வார்த்தல் விழா நடத்துவது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு, கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கூழ்வார்த்தல் விழா துவங்கியது.
வீதி உலா: சனிக்கிழமை காலை ஆலஞ்சேரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அபிஷேகம் நடந்தது. நேற்று மலரால் அலங்கரிக்கப்பட்ட அவ்வையார், வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது, தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். மாலை 3:00 மணிக்கு, அவ்வையார் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடந்தது.ஆலஞ்சேரி மற்றும் அப்பகுதியை சுற்றிலும் உள்ள நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.