பதிவு செய்த நாள்
25
மே
2015
11:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று முதல், வசந்த உற்சவம் நடக்கிறது. ஜூன் 2ம் தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்கிறார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், வசந்த உற்சவம் சிறப்பாக நடக்கும். நடப்பாண்டு வசந்த உற்சவம் இன்று துவங்குகிறது. ஜூன் 2ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் நடக்கிறது. வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு, தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 6 மணிக்கு வசந்த மண்டபத்தை வந்தடைவார். இரவு 8.30 மணி வரை நம்பெருமாள், வசந்த மண்டபத்தில் உபயநாச்சியார்களுடன் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதை தொடர்ந்து, 8.30 மணிக்கு அலங்காரமும், அமுதும் செய்விக்கப்பட்டு, நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர், வசந்த மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானத்துக்கு சென்றடைகிறார். விழா நிறைவு நாளான ஜூன் 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு, நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு, சித்திரை வீதிகள் வலம் வந்து சந்திரபுஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். பின்னர், வசந்த மண்டபத்தில் நம்பெருமாள், திருமஞ்சனம் கண்டருள்கிறார். இரவு 11.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். வசந்த உற்சவத்தை முன்னிட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தான சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.