பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
ப.வேலூர்: பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில் விழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 10ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. கடந்த 17ம் தேதி, மறுகாப்பு கட்டப்பட்டது. தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4.30 மணிக்கு தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். பாண்டமங்கலத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து தேர் மீண்டும் நிலை அடைந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (மே, 26) மாலை, 4 மணிக்கு குண்டம் இறங்கும் விழாவும், நாளை (மே, 27) மாலை, 6 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. மே, 28ம் தேதி காலை, 6 மணிக்கு கிடா வெட்டும், மே, 29ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.