பழநி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ சரண கோஷத்துடன் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா’ கொடியே ற்றத்துடன் துவங்கியது. ஜூன் 4 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. வசந்த உற்சவ விழா என அழைக்கப்படும் பழநிகோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயில் கொடிமரத்திற்கு முன் ஆறு காலசங்கள் வைத்து, சிறப்பு அர்ச்சனைகள், பூஜைகள் செய்து நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முத்துகுமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம் நாள் மே31ல் மாலை 6.30 மணிக்குமேல் 7.15 மணிக்குள் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏழாம் நாளான ஜூன் 1ல் வைகாசி விசாகத்தன்று மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப் பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையிருந்து புறப்பாடாகி, நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி தங்கமயில், வெள்ளிக்காமதேனு, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். தினமும் மாலையில் பக்திசொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.