கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் பாதுகாப்புக் கருதி கூடுதலாக நான்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் சுவாமி சிலைகள், உண்டியல் உடைத்து பணம் திருடும் சம்பவங்களைத் தடுத்திட கண்காணிப்பு கேமரா அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கடந்த 2013ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உட்பிரகாரம், வெளிப் பிரகாரங்களில் மொத்தம் 16 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவராத்திரி, வைகாசிப் பெருவிழா, பிரதோஷம் உள்ளிட்ட விஷேச நாட்களில் பக்தர்களின் கூட்டம் கோவிலுக்கு வெளியேயும் அதிகளவில் கூடுகின்றனர். இதுபோன்ற நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தவிர்த்திடவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணும் பொருட்டும் இந்த சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு வெளிப்பகுதிகளில் கூடுதலாக 4 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.