பதிவு செய்த நாள்
27
மே
2015
12:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி இன்று மாலை, 5.15 மணியளவில் நடக்கிறது. கோவிலில் கடந்த, 10ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. 15ம் தேதி பூச்சொரிதல் விழா, 17ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடந்தது. விழாவில், நேற்றுமுன்தினம் அதிகாலை முதலே ஐந்து ரோடு அமராவதி ஆற்றங்கரை, வஞ்சியம்மன் கோவில் தெரு அமராவதி ஆற்றங்கரையிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், காவடி எடுத்து, குழந்தையை கரும்பு தொட்டில் கட்டியும், தீர்க்குடம் எடுத்து வந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்களுக்கு நிகராக பெண் பக்தர்களும் விமான அலகுகளை குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, அனைவரையும் பக்தி பரவசப்படுத்தினர். திருத்தேரோட்டமும் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்றும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.அதிகளவில் விமான அலகு உள்ளிட்ட பெரிய அலகுகளை குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் இன்று மாலை, 5.15 மணியளவில் நடக்கிறது. கோவிலிலிருந்து கருப்பாயி கோவில் தெரு அமாராவதி ஆற்றங்கரை வரை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுப்பப்படுகிறது. மேளதாளம், தாரை தப்பட்டடை முழங்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து, நாளை முதல் தொடர்ந்து எட்டு நாட்களுக்கு, புஷ்பம், கருடன், மயில், கிளி, வேப்ப மரம், பின்ன மரம், புஷ்பம், பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு, ஸ்ரீ மாரியம்மன் பல்லக்கு, ஆகிய வாகனங்களில் நாள்தோறும் ஒன்றில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஆறாம் தேதி ஊஞ்சல் உற்சவம், ஏழாம் நாள் சம்ரோஷணை, அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.