திருத்தணி: மூன்று ஊராட்சிகளில் நேற்று நடந்த கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம், வீரகநல்லூர் மற்றும் தாடூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு எல்லையம்மன் மற்றும் சக்தி அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கங்கையம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு பூ கரகம் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்தது. இரவு, 8:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பூ கரகத்துடன் உற்சவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சியும், பின்னர், நாடகம் நடந்தது.