பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், தலைமுடி ஏலம், 2.51 கோடி ரூபாய்க்கும், பிரசாத விற்பனை நிலையம் ஏலம், 1.44 கோடி ரூபாய்க்கும், நேற்று ஏலம் விடப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை, ஆண்டுக்கு ஒருமுறை கோவில் நிர்வாகம் பொது ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பொது ஏலம், நேற்று கோவில் தலைமை அலுவலகத்தில், இணை ஆணையர் புகழேந்தி தலைமையில் நடந்தது. இதில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 2.51 கோடி ரூபாய்க்கு தலைமுடி ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு, 2.26 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், மலைக்கோவிலில் உள்ள கோவில் பிரசாத விற்பனை நிலையமும், ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. இதற்கும், நேற்று ஏலம் விடப்பட்டது. திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர், 1.44 கோடிக்கு ஏலம் எடுத்தார். பிரசாத விற்பனை நிலையம், கடந்த ஆண்டு, 1.30 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில், இந்த இரண்டு ஏலம் மூலம் மட்டும், 39.30 லட்சம் ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்து உள்ளது. தலைமுடி மற்றும் பிரசாத விற்பனை நிலைய ஏலத்தை முன்னிட்டு, எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க, திருத்தணி டி.எஸ்.பி., பொற்செழியன் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.