பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
01:06
கோவை: காரமடையில் உள்ள வைணவத் தலமான, அரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், ஜூன் 7ல் நடைபெற உள்ளது. திருமலை நாயக்கரின் முதுகில் தாக்கிய ராஜ பிளவை நோய், அரங்கநாதர் கோவில் காரை மரத்தின் மகிமையால் நீங்கியது. அகமகிழ்ந்த அவர், திருக்கோவில் மதில்கள், கல்யாண மண்டபம், தெப்பக்குளம், பரிவேட்டை மண்டபம், சங்கிலி மண்டபம் கட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். திருத்தேர் அமைத்து மாசிமகம், பவுர்ணமி திருநாளில் விழா கொண்டாடினார். தேரோட்டம் மற்றும் திருவிழாக்களை தர்மசாஸ்திரப்படி நடத்தி வர வேண்டும் என்று, கொங்கு நாட்டிலுள்ள அனைத்து ஒக்கலிகர், அமஸ்வாடி ஒலேகார் திம்மண்ணருக்கு, தாமிர தாசன் பட்டயம் மூலம் ஆணையிட்டார்.
தேரின் தத்துவம்: மனம் என்னும் கடிவாளத்தால், இந்திரியங்களை கட்டுப்படுத்தி புத்தியை நன்னடத்தையால் வழிநடத்தினால், சரீரம் எனும் தேரில் வீற்றிருக்கும் இறைவனாகிய ஆத்மாவை உணர்வோம் என்பதே தேரின் கருத்து. அவ்வாறான இந்த ரதத்தில் ராமாயண காண்டங்களாகிய பாலகாண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்தகாண்டம் என ஆறு காண்டத்து கதையை விளக்கும் பதுமைகள் அமைந்துள்ளன.
நாரதர் வால்மீகிக்கு உபதேசம் செய்வது முதல், அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த, வசிஷ்டரே ராமனுக்கு முடி புனையும் பட்டாபிஷேக காட்சிவரை, மரத்தில் சிற்றுளியால் அதி அற்புதமாக செதுக்கி வடித்த சிற்பங்கள் அமைந்துள்ளன. வால்மீகியும், கம்பனும் காவியதத்டல் அமைத்த காட்சிகளாக அமையப் பெற்ற, இப்பதுமைகளை பார்த்து, கவிகளின் பாடல்களை படித்து, பொருள் புரியா பாமரரும் அது கூறும் ராமாவதார கதையை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களுள் ஒன்றான காரமடை தேரின் மீது, வீற்றிருக்கும் அரங்கப்பெருமானை பக்தர்கள் சுற்றி வந்து வணங்கி செல்லும் வகையில் அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும். ஊர் கூடி தேடி இழுப்பது என பழமொழிக்கேற்ப, லட்சக்கணக்கான மக்கள் கூடி, நான்குரத வீதிகளிலும், தேரை இழுத்து வரும் பொழுது, ஆடி அமைந்து அழகு மிளிர, அரங்கன் வரும் காட்சி, கண் கொள்ளாக் காட்சியாகும்.