பதிவு செய்த நாள்
03
ஜூன்
2015
02:06
திருப்பூர்: வெங்கட்ரமணா கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில், திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விகாச தேர்த்திருவிழா, 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், விஸ்வேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள், ராஜ அலங்காரத்தில், தங்ககிரீடம் அணிந்திருந்தார். மதியம் 2:55 மணிக்கு, மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், கமிஷனர் அசோகன் உள்ளிட்டோர், வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பக்தர்களின் வெங்கட்ரமணா கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில், தேர் அசைந்தாடி சென்றது.
மாலை, 5:45 மணியளவில், கோவில் தெற்கு கோபுர வாசலை வந்தடைந்தது. அங்கு, தெற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு, சாயரட்சை பூஜை நடத்தப்பட்டது. மாலை, 6:10 மணிக்கு, பூ மார்க்கெட் சந்திப்பை சென்றடைந்தது. போதுமான அளவு சோடியம் விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், தேர் எளிதாக கிழக்கு நோக்கி திரும்பியது. பூ மார்க்கெட் வியாபாரிகள், தேர் மீது மலர் துõவி வழிபட்டனர். 6:50 மணியளவில், நிலையை தேர் வந்தடைந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, சாந்தி பூஜையை தொடர்ந்து, சோமாஸ்கந்தர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள், தேரில் இருந்து இறங்கினர். சப்பரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள், தேரோடிய வீதிகளில் உள்ள வண்டித்தாரை பார்க்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, கோவிலுக்குள் எழுந்தருளலும் நடைபெற்றது. விஸ்வேஸ்வரரும், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், தம்பதி சமேதராக குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆறு தாண்டிச் செல்லும் பரிவேட்டை நிகழ்ச்சி, இன்று நடைபெற உள்ளது.