பதிவு செய்த நாள்
04
ஜூன்
2015
10:06
மேட்டுப்பாளையம் : காரமடையில் நேற்று மாலை நடந்த முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடங்கள் ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். காரமடை அரங்கநாதர் கோவில் மகாகும்பாபிஷேகம் வரும், 7ம் தேதி நடக்கிறது. விழாவின் துவக்க நாளான நேற்று மாலை, 5:00 மணிக்கு, காரமடை அருகேவுள்ள பெட்டத்தம்மன் கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, தீர்த்த குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தின் முன், இரு குதிரைகள் நடனமாடிச் சென்றன. தொடர்ந்து, யானை மீது தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. யானையின் பின்னால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முளைப்பாரியையும், தீர்த்தக்குடங்களையும் எடுத்து வந்தனர். தாரை தப்பட்டை, வாத்திய இசை, செண்டை மேளம் முழங்க ஊர்வலம் காரமடையை நோக்கி வந்தது. பெட்டத்தம்மன் மலை அடிவாரத்தில் இருந்து, பெட்டதாபுரம், கோவை மெயின் ரோடு வழியாக, ஊர்வலம் காரமடைக்கு வந்தது. ஐந்துமுக்கு பகுதிக்கு வரும் போது, மழை பெய்யத் தொடங்கியது. பெண்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு, தேர் செல்லும் நான்கு வீதிகள் வழியாக சென்று, கோவிலை அடைந்தனர்.பக்தர்களுக்கு கோவில் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 9:00 மணிக்கு மகா சுதர்ஸன ஹோமத்துடன், கும்பாபிஷேக பூஜை துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்தனர்.