பதிவு செய்த நாள்
04
ஜூன்
2015
11:06
கோவை : வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக இருப்பது வெள்ளியங்கிரி மலைக்கோவில். கோவிலின் உச்சியில், சிவன் சுயம்பு வடிவில் காட்சியளிப்பார். சிவனை தரிசனம் செய்ய, ஆண்டுக்கு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள்.அடர்ந்த வனப்பகுதியில், இக்கோவில் அமைந்துள்ளால், ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே, பக்தர்கள் மலையேறுவதற்கு, வனத்துறை சார்பில் அனுமதியளிக்கப்படும். அதன்படி, மார்ச் முதல், மே வரை பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. தற்போது, வெள்ளியங்கிரி மலையில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இம்மாதம் முதல் பக்தர்கள் மலையேறுதற்கு, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். போளுவாம்பட்டி வனச்சரகர் தினேஷ் குமார் கூறுகையில், பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியை கடந்து, சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், வனத்துறையினரின் பாதுகாப்புடன், அவர்கள் மலையேற மூன்று மாதத்துக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. காலநிலை மாறுவதால், பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.