பதிவு செய்த நாள்
12
ஜூன்
2015
10:06
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது.
குடும்ப சமேதராக பெருமாள் காட்சிய ளிக்கிறார். இக்கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு விசுவரூபம், கும்பாராதனம், காலசந்தியும், 4.30 மணிக்கு 8வது கால ஹோமம், திவ்யபிரபந்தசேவை, 6.30 மணிக்கு பெருமாள் கும்பத்துடன் சன்னதியில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7 மணி முதல் 8 மணிக்குள் பார்த்தசாரதி, ஆண்டாள், வேதவல்லித்தாயார், ரங்கநாதர், கோதண்டராமர், ராமானுஜர், மணவாளமாமுனிகள், ஆழ்வார், விமானங்கள் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழக்க தரிசனம் செய்தனர்.