பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
11:06
திருச்சி: அகோபிலமடம், 46வது பட்டம் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் ஜீயர் எனப்படும், அழகிய சிங்கர் சுவாமிகளின், 60வது பிறந்தநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி விழா, மடத்தின் சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, கடந்த, 10 நாட்களாக, தினமும் மாலோல நரசிம்மருக்கு சிறப்பு திருவாதாரதனங்கள் நடத்தியதோடு, பக்தர்களுக்கு, ஜீயர் அருளாசி வழங்கினார். ஸ்ரீரங்கம் கீழஉத்தர வீதி அகோபிலமடம் மற்றும் வடக்கு வாசல் தசாவதாரர் சன்னதி ஆகிய இடங்களில் வேத, பிரபந்த பாராயணங்கள் நடைபெற்றது. தினமும் மாலையில், ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, ஜீயரின் சஷ்டியப்த பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து சீடர்கள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் விழாவில், ஜீயரிடம் ஆசி பெற்றனர். சஷ்டியப்தபூர்த்தியை முன்னிட்டு, ஜீயர் படம் பொறித்த தபால்தலை வெளியிடப்பட்டது.