பதிவு செய்த நாள்
24
ஜூன்
2015
12:06
திருத்தணி: எஸ்.அக்ரஹாரம் பகுதியில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா, நேற்று நடந்தது.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனி யில், நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை 8:00 மணிக்கு சக்தியம்மனுக்கும், எல்லையம்மனுக்கும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கங்கையம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 5:00 மணிக்கு பூங்கரகம், காலனி பகுதியில் ஊர்வலம் வந்தது.
அப்போது, ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி, கொண்டாடினர். மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில்திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூங்கரகத்துடன் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து கும்பம் கொட்டும் நிகழ்ச்சி, நாடகம் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.