பதிவு செய்த நாள்
29
ஜூன்
2015
10:06
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அருகே மழை வேண்டி, கிராம மக்கள் கொடும்பாவி கட்டி இழுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தில், மழை வேண்டி கிராம மக்கள் ராகு காலத்தில் கொடும்பாவி கட்டி இழுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று மாலை 4:30 மணிக்கு, பெண் ராட்சத உருவத்தை பொம்மையாக செய்து, ஒரு வண்டியில் படுக்க வைத்து, தெருத் தெருவாக, ஒப்பாரி பாடியபடி, இழுத்துச்சென்றனர். பின், இந்த பொம்மையை ஏரிக்கரையில் வைத்தனர். மாலை 5:00 மணிக்கு வேம்பு மரத்தின் கீழ், மழைவேண்டி வருணபூஜைகள் செய்தனர். தொடர்ந்து கருங் கற்கலான கங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அபிஷேகம் செய்தனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மழை வராவிட்டால், கங்கையம்மனுக்கு பூஜைகள் செய்து சிலையை நிமிர்த்தி வைப்போம். போதுமான மழை பெய்தவுடன் ஏரி உடையாமல் இருக்க, அம்மனின் சிலையை வேப்பமரத்தின் அருகில் கவிழ்த்து போட்டு விடுவோம். தற்போது மழை பெய்யாததால், சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தண்ணீர் ஏரியில் கலக்கும் வரை நீரை சிலை யில் ஊற்றுவோம். கொடும் பாவி கட்டி இழுத்த களிமண் பொம்மை, மழை பெய்யும் போது கரைந்து ஏரிக்குள் சென்று விடும் என்றனர்.