ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாண விழா, மூடி கிடக்கும் திருகல்யாண மண்டபத்தில் நடத்திட, முதல்வர் ஜெ., உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடபடுகிறது. இதில் ஆடி திருக்கல்யாண விழா, கடந்த சில ஆண்டுகளாக கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நடப்பதால் இட நெருக்கடியில் சிக்கி பக்தர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க கோயில் கோசாலை அருகே ஒரு கோடி ரூபாய் செலவில் திருக்கல்யாண மண்டபம் அமைக்கப் பட்டது. 20 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப் படாததால் மண்டபத்திற்குள் தூசு படிந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் ஆடி திருவிழா துவங்க உள்ள நிலையில் திருக்கல்யாண மண்டபத்தை திறக்க இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது: நன்கொடை யாளர்கள் மூலம் கட்டிய திருக்கல்யாண மண்டபம் 20 மாதமாக மூடிக் கிடப்பதால், நன்கொடை யாளர்கள், பக்தர்கள் வேதனை படுகின்றனர். இந்நிலை நீடித்தால், இனி வரும் காலத்தில் கோயிலுக்கு நன்கொடை கொடுக்க தயங்குவர். ஆடி திரு விழாவில் சுவாமி, அம்பாள் திருக் கல்யாணத்தை புதிய மண்டபத்தில் நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.