பதிவு செய்த நாள்
02
ஜூலை
2015
11:07
சென்னை: தமிழக பாரம்பரிய கலாசாரம் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உருவாக்கப்பட்டது பூம்புகார் நிறுவனம். இந்த நிறுவனம் சார்பில், பஞ்சலோக சிலைகள், குத்துவிளக்குகள், கற்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. பூம்புகார் சார்பில், பழங்கால பஞ்சலோக சிலைகள், ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள, ‘அமிதீஸ்’ வளாகத்தில் நேற்று துவங்கியது. பூம்புகார் மேலாண் இயக்குனர் சந்தோஷ்பாபு கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், பஞ்சலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், சந்தன, செம்மரம் மற்றும் வெள்ளை மரத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள், பனை ஓலையில் வரையப்பட்ட ஓவியங்கள், குத்துவிளக்கு வகைகள், கல் சிற்பங்கள் என, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. வரும், 5ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. குறைந்த பட்சம், 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிற்பங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.