நியூயார்க்: தமிழக கோவில்களில் இந்து திருடி அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்ட சோழர் காலத்து செம்பு சிலைகளை அந்நாட்டு குடிவரவு மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்த சுபாஷ் கபூர் சிலை திருடி கடத்தும் கும்பலை இயங்கி வந்தார். இவர் மூலம் பல நாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்பட்ட சிலைகள் உள்ளிட்ட இந்திய கலைப்பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சுபாஷ் கபூர் மீது நியூயார்க் நகர நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிலை கடத்தல் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கு தப்பி வந்த சுபாஷ கபூர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவரிடம் இருந்து சோழர் காலத்தை சேர்ந்த கலைப்பொருள் என்பது தெரியாமல் வாங்கிய ஒரு சிலையை அமெரிக்காவை சேர்ந்த ஆசிய கலைப் பொருள் சேகரிப்பாளர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 6.35 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலை 11 அல்லது 12ம் நூற்றாண்டை சேர்ந்த மாணிக்கவாசகரின் சிலையாகும். இரண்டரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகரின் சிலை தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் சிவன் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு போலி ஆவணங்களுடன் 2006ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டதாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க பிரிவின் (எச்.எஸ்.ஐ.) அதிகாரிகள் கூறியுள்ளனர். மாணிக்கவாசகர் சிலையுடன் சோழர் காலத்தை சேர்ந்த வேறு ஆறு ஐம்பொன் சிலைகளையும் எச்.எஸ்.ஐ. அதிகாரிகள் விரைவில் இந்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளனர்.