பதிவு செய்த நாள்
13
ஜூலை
2011
11:07
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோவிலின், 507வது தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவில் பரப்பளவில் மிகப்பெரியதாகும். நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், வீதி உலா நடந்தது. இன்று 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். அதிகாலையிலேயே விநாயகர் தேர், சுப்பிரமணிய தேரோட்டம் நடந்தது. காலை 7.50 மணிக்கு சுவாமி தேரை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ, நெல்லை எம்.பி., ராமசுப்பு(காங்.,).நெல்லை எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், டி.ஆர்.ஓ., ரமணசரஸ்வதி உள்ளிட்டோர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். சிறிதுநேரத்திலேயே வாகையடி முனையை கடந்தது. காலை 11.15 மணிக்கு லாலா சத்திரமுக்கை கடந்தது. தொடர்ந்து காந்திமதியம்மன் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்திற்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று 13ம்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.