பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
10:07
மேட்டுப்பாளையம் :வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஆடிக்குண்டம் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர்.இந்தாண்டு குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. முன்னதாக பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.பின் அம்மன் ஆபரண அணிக்கூடையை தலையில் சுமந்தபடி, பூசாரி பரமேஸ்வரனை, கோவிலுக்கு மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர். சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு பூசாரி காப்புக் கட்டினார். தொடர்ந்து சுப்ரமணியசுவாமி கோவில் அர்ச்சகர் தனசேகர குருக்கள் பூஜை செய்து, பூசாரிக்கு காப்புக்கட்டினார்.
இரவு, 10:00 மணிக்கு நெல்லித்துறை ஊர் பொதுமக்கள் பால் மற்றும் தீர்த்தக்குடங்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதன்பின், சிறப்பு பூஜை செய்து, ஆடிக்குண்டம் திருவிழா பூச்சாட்டப்பட்டது.இதில், கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) நந்தகுமார், பரம்பரை அறங்காவலர் வசந்தா, கண்காணிப்பாளர் செல்வராஜ், அலுவலக ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.வரும் 24ம் தேதி லட்சார்ச்சனையும், 25ல் கிராம சாந்தி, முனியப்பன், பகாசூரன் வழிபாடும், 26ல் கொடியேற்றமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்க உள்ளது. 27ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 28ல் அதிகாலை 3.00 மணிக்கு அம்மன் அழைப்பும், காலை 6.00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது.வரும், 29ல் மாவிளக்கும், அலகு குத்தி தேர் இழுப்பும், மாலையில் பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 30ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், வாண வேடிக்கையும் நடக்க உள்ளது. 31ல் மகா அபிஷேகமும், மஞ்சள் நீராட்டும், கொடியிறக்கமும், ஆக., 3ல், 108 திருவிளக்கு பூஜையும், 4ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர், பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.