பதிவு செய்த நாள்
30
ஜூலை
2015
02:07
அன்னுார்: அன்னுார் கருப்பராயர் கோவில் தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார், சிறுமுகை ரோடு, கைகாட்டியிலுள்ள கருப்பராயர் கோவில் தேர்த்திருவிழா, 27ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கருப்பராயருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. 10:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. மதியம் 12:15 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். 12:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. முதலில் விநாயகர் தேரும், அடுத்ததாக, கருப்பராயர் தேரும் சென்றன. பக்தர்கள் கருப்பராயருக்கு பக்தி கரகோஷம் எழுப்பியபடி, ஜமாப் இசையுடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மதியம், 2:15 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில், அன்னுார், கோவை, திருப்பூர், புளியம்பட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். 25 கிடாய்கள் வெட்டப்பட்டது; 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், அன்னுாரிலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.