பதிவு செய்த நாள்
31
ஜூலை
2015
12:07
கூடுவாஞ்சேரி:நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள, நந்தீஸ்வரர் கோவில் குளம், ஆக்கிரமிப்புகளால் சீரழிந்து வருகிறது.நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள, சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு எதிரில், 2.5 ஏக்கர் பரப்பளவில் கோவில் குளம் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த குளத்து நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்; பக்தர்கள் குளத்தில் நீராடி, சுவாமியை தரிசனம் செய்து வந்தனர். இத்தகைய குளம் தற்போது, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. குளத்தைச்சுற்றி வீடு கட்டி வசிப்பவர்கள், கழிவுநீரை குளத்தில் விடுவதும், குப்பையை கொட்டுவதுமாக குளத்தை துார்த்து தங்களது ஆக்கிரமிப்பை விரிவாக்கி வருகின்றனர். இதனால், குளம் குறுகியதோடு, குளத்துநீர், கழிவுநீர் சாக்கடையாக மாறியுள்ளது.மேலும், குளத்தின் சுற்றுப்புறத்தில் முட்செடிகள் வளர்ந்து, சுகாதார சீர்கேடாக உள்ளது.குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குளத்தை சீரமைக்குமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளோம். உடனடியாக குளத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெறும், என்றார்.