பதிவு செய்த நாள்
31
ஜூலை
2015
12:07
கீழக்கரை: ஏர்வாடி தர்காவில் பெண்களின் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.ஏர்வாடி காலனித்தெருவில் உள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோயில் முளைக்கொட்டு உற்சவ விழா நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரிகளை தூக்கி வந்தனர். அவற்றை கடலில் கரைப்பதற்கு முன் ஏர்வாடி தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. நிர்வாகத்தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாரூக் ஆலீம், துணைத்தலைவர் சிராஜுதீன், மூத்த உறுப்பினர் துல்கருணை பாட்ஷா லெவ்வை ஆகியோர் வரவேற்றனர். வாழவந்தாள் மாரியம்மன் கோயில் பூஜாரியின் கரகம் முன் செல்ல, முளைப் பாரிகளை சுமந்தபடி ஏராளமான பெண்கள் தர்காவை மூன்று முறை வலம் வந்தனர். பின்னர் நுழைவு முற்றத்தில் கும்மி, ஒயிலாட்டம் ஆடி, முளைப்பாரியின் சிறு பயிரை பூஜாரி தர்கா ஹக்தார்களிடம் வழங்கினார். அவற்றை சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தின் தலைமாட்டுப்பகுதியில் வைத்தனர். பின்னர், மழை வேண்டியும், உலக நன்மைக்காவும் துஆ ஓதி பிரசாதமாக ஜீனி வழங்கினர். பின்னர், முளைப் பாரியை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து ஹக்தார் சபை நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""காலம் காலமாக நடைபெறும் இத் திருவிழாவில் பங்கேற்க வரும் அழைப்பை ஏற்று, இரவில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோம். தர்கா ஹக்தார் சபை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்வார்கள். நாங்களும் நன்கொடைகள் வழங்கி சிறப்பு செய்வோம். இத்திருவிழா மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது, என்றார்.